;
Athirady Tamil News

3 மாநில தேர்தல் முடிவு- திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக!!

0

வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது.

மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது. பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது.

இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவியது. இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பா.ஜனதா கூட்டணி 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மற்றவை பூஜ்ஜியம் இடத்தில் உள்ளது. 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும் பா.ஜனதா 19 தொகுதிகளிலும் களம் இறங்கின.

நாகா மக்கள் முன்னணி (என்.பி.எப்.) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 12 இடங்களிலும் களம் இறங்கின. இங்கு பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி வெற்றி பெறவில்லை.

மற்ற கட்சிகள் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது. இந்நிலையில், திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. மேகாலயா மாநிலத்தில் இதுவரையில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் இழுப்பறியில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.