;
Athirady Tamil News

வீடுகளை சூழ்ந்துள்ள மழை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கும் புளியஞ்சோலை- 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின!!

0

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதிகளில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. மாலை வேளையில் பலத்த இடி, மின்னல் மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. கொல்லிமலையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழைப்பொழிவு விடிய, விடிய தொடர்ந்ததால் புளியஞ்சோலை பகுதி வெள்ளக்காடாக மாறியது. நேற்று மாலை முதல் பெய்த மழையால் ரெட்டியாப்பட்டி வேப்பமர வீதி பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளை சுற்றி மழை தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். குறிப்பாக ராமாயி (வயது 65) என்ற கூலித் தொழிலாளியின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் சமையல் பாத்திரங்கள், மளிகைப்பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. புளியஞ்சோலை பகுதிகளில் பெய்த கனமழையால் தங்கநகர், குண்டக்கல் பகுதிகளில் மழை தண்ணீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கியது.

குண்டக்கல்லிலிருந்து தங்கநகர் வரும் பாதை முழுவதும் நீரோட்டமாக இருப்பதால் தார்ச்சாலை நீர்வழிச்சாலையாக மாறி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒக்கரையில் பெய்த கனமழையால் ஒக்கரை, கிருஷ்ணாபுரத்திற்கு இடையேயான ஏரிப்பாசன பகுதிகளில் உள்ள மழை வடிகால்கள் மூழ்கின. மேலும் அந்த பகுதியை மழை நீர் சூழ்ந்ததால் சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் துறையூர் பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். விடிய, விடிய பெய்த மழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் புளியஞ்சோலை நாட்டாமடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த 40 நாட்களாக பாதுகாப்பு கருதியும், ஆக்கப்பூர்வ பணிகளுக்காகவும் நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் புளியஞ்சோலை காப்புக் காடு பகுதி, நாட்டாமடு பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதித்துள்ளனர். தற்போது பெய்து வரும் பலத்த மழையால் இந்த தடை மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.