அமெரிக்க நிறுவனங்களில் சீனா அதிரடி சோதனை!!
சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான கேப்விஷனில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில், சமீப நாட்களாக அதிகமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் பாதுகாப்பு கருதியும், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின் வெளிநாட்டு முதலீடுகளை திரும்ப பெறும் வகையிலும் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசு தெரிவித்துள்ளது. மேலும் சமீப ஆண்டுகளில் சீனாவை அடக்கும் உத்தியை உணர்ந்து கொள்வதற்காக சில வெளிநாடுகள் சீனாவின் ராணுவத் தொழில், பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான உளவுத்துறை மற்றும் தகவல்கள் திருட்டு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூயார்க் மற்றும் ஷாங்காயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேப்விஷன் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் சீனாவின் வெளிநாட்டு உளவு ஏஜென்சி சோதனை நடத்தியது. பெய்ஜிங், தென்கிழக்கு உற்பத்தி மையங்களாக சுசோ மற்றும் ஷென்ஷெனில் உள்ள கேப்விஷன் கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம், போலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகள் நிறுவனத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.