வெலிகம துப்பாக்கிச் சூடு: திடுக்கிடும் தகவல்கள் !!
வெலிகம தெனிபிட்டிய பிரதேசத்தில் நேற்று (15) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வெலிகம பகுதியைச் சேர்ந்த கமல் சமிந்த என்ற 52 வயதான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரும் அவருடைய 20 வயது மகனும் இருசக்கர வாகனத்தில் வெலிசறையிலிருந்து அக்கறசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மகன் ஓட முற்பட்ட போதும் துப்பாக்கிதாரி விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். அதனால் கடும் காயங்களுக்குள்ளாகிய மகன் மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் பின்னரே தந்தையும் மகனும் அக்குறச நோக்கிச் சென்றது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்களை ஆராயும்போது, சந்தேகநபர் T56 ரக துப்பாக்கியால் 23 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பாதாள உலகக் கும்பலொன்றின் ஒப்பந்தக் கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பேர் அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.