;
Athirady Tamil News

53 வயதிலும் அசராத பயணம்… எவரெஸ்ட் சிகரத்தில் 28வது முறை ஏறி நேபாள வீரர் புதிய சாதனை!!

0

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களும் வீரர்களுடன் சிகரத்தில் ஏறி இறங்குகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி கமி ரீட்டா (வயது 53), மலையேற்ற வீரர்களுடன் இன்று சிகரத்தை அடைந்தார். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவர் சிகரத்தை அடைந்துள்ளார்.

அத்துடன் தன் வாழ்நாளில் 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். அவர் பாரம்பரியமான தென்கிழக்கு மலைமுகட்டு பாதை வழியாக சென்று 8,849 உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். மலையேற்றம் தடை செய்யப்பட்ட ஆண்டுகளைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் சிகரத்தில் ஏறி உள்ளார். தென்கிழக்கு மலைமுகட்டு பாதையை முதன்முதலாக 1953ஆம் ஆண்டில் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் பயன்படுத்தினர்.

அதன்பின்னர் இந்த பாதையில் அதிக வீரர்கள் பயணிக்கத் தொடங்கி, தற்போது மிகவும் பிரபலமான பாதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கமி ரீட்டாவுக்கு அடுத்தபடியாக, மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார். அவர் கடந்த வாரம் இந்த சாதனையை எட்டினார். பிரிட்டனைச் சேர்ந்த கென்டன் கூல் என்ற வீரர், 17வது முறையாக கடந்த வாரம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் இவர் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.