;
Athirady Tamil News

வடக்கில் பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது – ஆளுநர் கவலை

0

அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக செயற்படுகின்றன என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போதைய கள யதார்த்தத்தில் உள்ள சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டில் அதீத ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றது.

அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகச் செயற்படுவது மிகுந்த கவலைக்குரியது.

உடனடியாக இவ்வாறான அதிகாரத்துவ முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டு, அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்பட முன்வர வேண்டும், என தெரிவித்தார்.

ஆளுநரை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன்,

வடக்கு மாகாணத்தை இலங்கையின் முதன்மைச் சுற்றுலா மையமாக மாற்ற, இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தனது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரங்களை மாகாணப் பணியகத்துக்குப் பரவலாக்க வேண்டும்.

குறிப்பாக, சிறிய அளவிலான சுற்றுலா விடுதிகளைப் பதிவு செய்யும் அதிகாரத்தையாவது மாகாணத்துக்கு வழங்குவது பணிகளைத் துரிதப்படுத்தப் பெரிதும் உதவும்’ எனத் தெரிவித்தார்.

அதேவேளை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் எஸ்.சிறீபவானந்தராஜா ஆகியோர் சுற்றுலாவிகளின் தற்போதைய மனநிலை மற்றும் முதலீட்டாளர்களின் ஏமாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டனர்.

‘சுற்றுலாவிகள் வெறும் கடல் நீராடலுக்காக மட்டும் இங்கு வருவதில்லை. அவர்கள் சாகச விளையாட்டுகள் மற்றும் பல்வேறு புதிய பொழுதுபோக்கு அம்சங்களையே எதிர்பார்க்கின்றார்கள்.

மாலைதீவு போன்ற நாடுகளில் சிறு தீவுகளிலும் கடலின் நடுவிலும் குடில்களை அமைத்துச் சுற்றுலாவிகளை ஈர்க்கின்றார்கள். வடக்கிலும் அத்தகைய அற்புதமான சூழலும் தீவுகளும் உள்ளன. ஆனால், சுற்றுலா மையங்களை அமைப்பதற்கு அனுமதி பெறுவதில் ஏற்படும் நீண்டகாலத் தாமதங்கள் காரணமாக, ஆர்வத்துடன் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்தச் சிவப்பு நாடா நடைமுறைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்’ என வலியுறுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.