;
Athirady Tamil News

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது- இது இங்கல்ல, சுவீடனில்…!!

0

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் கிடையாது என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது இங்கல்ல, ஐரோப்பிய நாடான சுவீடனில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.

சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் சுவீடன் நாட்டில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை வெகுவாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதார அமைப்பு கூறுகையில், “கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டால், அவர்கள் கொரோனாவுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை” என்று கூறுகிறது.

சுவீடனில் சில பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதனை இலவசமாக செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகிறபோது சுவீடனில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை கடந்த வாரம் 35 சதவீதம் குறைந்துள்ளது.

இதுபற்றி குறிப்பிடுகையில், “பரிசோதனைக்கான வளங்களை வேறு இடங்களில் சிறப்பாக பயன்படுத்தலாம். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய்வாய்ப்படும் அபாயம் குறைவு, நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால் அவர்களைப் பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று சுவீடன் சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்தை எதிர்நோக்கி உள்ள இந்த நிலையில், சுவீடன் இப்படி ஒரு முடிவை எடுத்தது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து அங்கு பத்திரிகை ஒன்று, “கொரோனா பரவல் மற்றும் நோய் பரவல் சங்கிலியை உடைக்கும் திறனில் சுவீடன் மீண்டும் இருளில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.