;
Athirady Tamil News

ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 45 சதவீதம் குறைவு – இங்கிலாந்து ஆய்வில் தகவல்…!!!

0

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் வைரஸ் குறைவான நாட்களிலேயே அதிக நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் முன்பு உருவான டெல்டா வகை கொரோனா வைரசை விட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் டெல்டா வகை வைரசை விட ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாக உள்ளது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் இம்பீரியர் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கூறி இருப்பதாவது:-

ஒட்டுமொத்தமாக டெல்டா வகை தொற்றுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

டெல்டா வகை வைரசை விட ஒமைக்ரான் தொற்றால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவது 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

அதேபோல் ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்விலும் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் தொற்று நோய்கள் தேசிய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில், ‘‘மற்ற உருமாறிய கொரோனா வைரசுகளுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரானால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஆபத்து 80 சதவீதம் குறைவு’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.