;
Athirady Tamil News

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது!!

0

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

அவர்களில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியி்ல் ஈடுபட்டதாக இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை கடந்த 27ம் திகதி யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின் மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கி படகில் இருந்த மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களில் ஒருவர் நேற்று மாலை சடலமாக கரை ஒதுங்கினார்.

அதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை முதல் வீதிகளில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து நேற்று இரவு யாழ்ப்பாண மீனவர்கள், எல்லை தாண்டி வந்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க படகுகளுடன் கடலுக்குள் சென்றனர்.

நடுக்கடலில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த தமிழக படகை சுற்றிவளைக்கும் போது படகில் இருந்த தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும் மீனவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.