நாடு முழுவதும் 40 சிறப்பு புற்றுநோய் மையங்களுக்கு அரசு ஒப்புதல்- பிரதமர் மோடி..!!
பஞ்சாப் மாநிலம மொகாலியில் உள்ள ஷாஹிப் சாதா அஜித் சிங் நகரில் கட்டப்பட்டுள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பகவந்த் மான், மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய பிரதமர் கூறியுள்ளதாவது: இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு சுகாதார சேவையை வளர்ச்சியடையச் செய்வது முக்கியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டில் ஒரு காலத்தில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 40 சிறப்பு புற்றுநோய் மையங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பல்வேறு மருத்துவமனைகள் ஏற்கனவே சேவையை தொடங்கியுள்ளன. மருத்துவமனை கட்டுவது முக்கியம் என்றாலும், அதற்கு இணையாக போதுமான மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்களை பணியமர்த்துவதும் முக்கியம். அலோபதி மருத்துவர்களைப் போல ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கும் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.