;
Athirady Tamil News

லாரியில் பற்றிய தீயால் விபரீதம்- 300 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது..!!

0

ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 306 கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கர்னூல்- பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியது. இதனை கண்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர். சிறிது நேரத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு தீ பிழம்பு கிளம்பியது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதனை கண்டு அங்கங்கே வாகனங்களை நிறுத்தினர். இதுகுறித்து உடனடியாக உளவு பாடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு துறையினரால் லாரியின் அருகே நெருங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. வெடித்த கியாஸ் சிலிண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். நள்ளிரவு நேரத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தேசிய நெடுஞ்சாலை 2 பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.