சேறு பூசும் தொழிற்சாலை தற்போது ராஜபக்ஷ, இயக்கி வருவதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.!!
சேறு பூசும் தொழிற்சாலை தற்போது ராஜபக்ஷ, இயக்கி வருவதாகவும்,அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய கலாசார நிதியம் மீது போலியான சேற்றை பூசிக்கொண்டிருப்பதாகவும்,
குற்றச்சாட்டுகளுக்கு தாம் ஒருபோதும் சளைக்கப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹினிதும தேர்தல் தொகுதிக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று (02) நடைபெற்றது. ஹினிதும தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பியசேன கமகே இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டதே தாம் செய்த ஒரேயொரு தவறாகும். அதன் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டவை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இது தொடர்பான அனைத்துத் திட்டங்களும் நிர்மாணங்களும் அரச நிறுவனங்களைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன என்றார்.
எதிர்க்கட்சியில் இருந்தவாறே ‘மூச்சு’,‘பிரபஞ்சம்’ மற்றும் பாடசாலைகளுக்கு பேரூந்துகள் என்பன எவ்வாறு வழங்கப்படுகின்றன என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும்,மனசாட்சியுடனும் பணிபுரியும் எந்தவொரு நபருக்கும் நன்கொடை வழங்கக்கூடிய நன்கொடையாளர்களும் இருக்கின்றனர் என்றார்.
வெளிநாட்டிலிருந்து ஜனாதிபதி வந்தவுடனயே உயர் பாதுகாப்பு தொடர்பான வர்த்தமானி மீளப்பெறப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதேபோன்றே பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
காலாவதியான முறைமைகளிலிருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச சமூகத்துடன் ஈடுபடக்கூடிய இளம் தலைமுறையை உருவாக்குவது அவசியம் எனவும் தெரிவித்தார். (a)