;
Athirady Tamil News

இந்தியில் மருத்துவப் படிப்பு தொடக்கம்…பிற மொழிகளிலும் விரைவில் தொடங்கப்படும்- உள்துறை மந்திரி அமித்ஷா..!!

0

நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்ற மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற் கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது என்றார். இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இனி, கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருக்காது, அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு தொடங்கப்பட்டது, விரைவில் பிற மொழிகளிலும் அது தொடங்கப்படும் என்றார். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.