;
Athirady Tamil News

விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சுட்டுக் கொலை: கணவனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

0

அமெரிக்காவில் விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், 5 குழந்தைகள் உட்பட 7 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் ஏனோக் அடுத்த உட்டா குடியிருப்பு பகுதியின் ஒரு வீட்டில் இருந்து 4 வயது சிறுமி உட்பட எட்டு பேரின் சடலங்களை போலீசார் மீட்டனர். இதுகுறித்து ஏனோக் காவல்துறைத் தலைவர் ஜாக்சன் அமேஸ் கூறுகையில், ‘உட்டாவைச் சேர்ந்த மைக்கேல் ஹைட் என்பவர், தனது ஐந்து குழந்தைகள், அவரது மாமியார் மற்றும் அவரது மனைவி தவுஷா ஹைட்ஸ் ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அவரது மனைவி தவுஷா ஹைட்ஸ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதனால் மைக்கேல் ஹைட்டுக்கு நீதிமன்ற சம்மன் வந்தது. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் இருந்த தனது 5 குழந்தைகள், மாமியார், மனைவி என 7 பேரை சுட்டுக் கொன்றார். அதன் பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தம்பதிகள் இடையிலான சண்டை மற்றும் விவாகரத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவில், எதற்காக தனது கணவரிடம் இருந்து மனைவி விவாகரத்து கோரினார் என்பது தெரியவந்தால் தான், கொலைகளுக்கான உள்நோக்கம் தெரியவரும்’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.