;
Athirady Tamil News

அறவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் – எம். கணேசமூர்த்தி!!

0

வரியானது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையிலேயே அற விடப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். வரி நியாயமானதாகவும், சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.

எனினும் அறவிட படவிருக்கும் வரியானது வரி ஒன்றுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் மீறுவதாக காணப்படுகிறது அறிவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட ஊழல் மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதி அதிகமாகும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக மற்றைய அனைவரும் தண்டனை அனுபவிக்கும் நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.

முறையற்ற அரச நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமற்ற தீர்மானங்கள் காரணமாகவே நாம் இன்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கிறோம்.

சட்டங்களையும், கொள்ளைகளையும் உருவாக்குபவர்கள், அதனை நடைமுறை படுத்துபவர்கள் போன்றவர்கள் தெரிந்து கொண்டே செய்த தவறுகளே இதற்கு மூல காரணமாகும். சீனி, வெள்ளை பூண்டு மோசடி, மத்திய வங்கி முறி மோசடி போன்ற பல ஊழல் மோசடிகளை பட்டியல் இட்டு காட்டலாம்.

இந்த மோசடி மூலம் இழக்கப்பட்ட நிதியின் அளவை எடுத்து பார்க்கும் போது அரசாங்கம் அறிவிடப்பட எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தை விட அதிகமாகும்.

எனவே இழந்த வருமானங்களை மீளப் பெற்றுக் கொள்வதை விடுத்து ஏன் அதிக வரியை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது? இழக்கப்பட்ட வருமானங்களை பெற்றுக்கொள்வதற்கு ஏன் இன்னும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை? என்பதே பலருடைய கேள்வியாகும் மேலும் இந்த வரி சாதாரண மக்களையும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

குறிப்பாக அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பல வைத்தியர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பொருளியலாளர்கள், விரிவுரையாளர்கள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் இடம்பெயர்வதால் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் தோன்றும். வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருக்கமாட்டார்கள். இருக்கும் ஊழியர்களை கொண்டு அந்த துறை இயக்க வேண்டி ஏற்படும்.ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு காரணமாக சுகாதார துறை கடுமையாக பாதித்திருக்கிறது.

இவ்வாறு வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போது சுகாதார துறை முற்றாக முடங்கும்.

தனியார் வைத்தியசாலைகளும் தமது இலாபத்தில் அதிக வரியை செலுத்த வேண்டி ஏற்படும் போது வைத்திய கட்டணங்களை உயர்த்தும், மருந்து பொருட்களுக்கான கட்டணம், மேலதிக சிகிச்சை கட்டணங்களை உயர்த்தும்.

எனவே இது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். ஏனையதுறையினரும் தமது கட்டணங்களை அதிகரிக்கும் போது நிச்சயம் சாதாரண மக்களை பாதிக்கும்.

தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் வரி ஏதோ ஒரு வகையில் அனைத்து தரப்பினர் மீது தாக்கம் செலுத்தும் என்பதே உண்மையாகும்.

எனவே அறவிடப்படும் வரி ஒருவருடைய வாழ்க்கை தரத்தை பாதிக்காத வகையிலேயே அமைய வேண்டும். அது நியாயமானதாகவும், சமூக மட்டத்தில் பாதிப்பு ஏற்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். எனினும அறவிட படவிருக்கும் வரியானது வரி ஒன்றுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் மீறுவதாக காணப்படுகிறது.

பணவீக்கம் அதிகரித்து வட்டி வீதங்கள் உயர்வாகவும் காணப்படும் காலப்பகுதியில் உயர் வரிகளை அறவிடுவது அவர்களுடைய வாழ்வாதாரத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.