;
Athirady Tamil News

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் கடிதம் கொடுத்தனர்- தேர்தல் ஆணையத்தில் திங்கட்கிழமை ஒப்படைப்பு!!

0

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இரு அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது. அதோடு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகவும் அ.தி.மு.க. பொதுக்குழு தேர்வு செய்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை அணுகினார்.

ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை அதை ஏற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் 5 தடவை முயற்சி செய்தும் தேர்தல் ஆணையம் அசைந்து கொடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்ய இயலாது என்று அறிவித்தது. இதனால் தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பழைய பதிவே இருக்கிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளனர். அவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரிடம் பதில் பெற்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நேற்று சில அதிரடி உத்தரவுகளை வெளியிட்டது. அதன்படி “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியானதும் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று, பின்னர்அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வில்லரசம் பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றார்.

அங்கு அவர் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செம்மலை, எம்.சி. சம்பத், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, கே.சி.கருப்பணன், கே.வி. ராமலிங்கம், தளவாய் சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் நோட்டரி பப்ளிக் சான்று, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்ற இடத்தில் டிக் போடும் படி அச்சடிக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த படிவங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்து வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவு கடிதம் பெற முடிவு செய்யப்பட்டது. இதே போல் ஓ. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் இந்த படிவம் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கும் படிவங்களை அச்சடிக்கும் பணி நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை மின்னல் வேகத்தில் சென்னையில் நடந்தது.

அந்த படிவத்தில், “அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கிறேன்” என்று அச்சிடப்பட்டிருந்தது. கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தங்கள் புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த ஒப்புதல் படிவங்கள் தயாரானதும் இரவோடு இரவாக சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது. கார், விமானங்களில் அந்த படிவங்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் எடுத்து சென்றனர். இன்று காலை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடந்தன. எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் 98 சதவீத அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மிகவும் ஆர்வமுடன் அந்த படிவங்களை பெற்று புகைப்படங்களை ஒட்டி கையெழுத்து போட்டு கொடுத்தனர். இந்த பணிகள் அனைத்தையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தங்கள் பகுதி மாவட்டங்களில் சரியாக நடக்கிறதா? என்று காலையில் இருந்தே தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். போனில் தொடர்பு கொண்டு பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசி கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பும், விறுவிறுப்பும் காணப்பட்டது.

ஒப்புதல் கடிதம் வழங்கும் விஷயத்தில் எந்த குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் மிகவும் கவனமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும் போட்டோ ஒட்டி கையெழுத்திட்டனர். பிறகு அந்த ஒப்புதல் படிவத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றையும் இணைத்து நோட்டரி பப்ளிக்கின் உறுதிமொழி பத்திரத்தையும் இணைத்து கொடுத்தார்கள். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 2,539 பேர் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்து தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2,500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெற எடப்பாடி பழனிசாமி ஆதரவு தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

சென்னையில் உள்ள 8 மாவட்ட செயலாளர்களுக்கும் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை 10 மணிக்கு ஒப்புதல் படிவங்களை வழங்கினார். சான்றிதழ்களுடன் தயாராக வந்தவர்கள் அங்கேயே பூர்த்தி செய்து கொடுத்தனர். அனைத்து படிவங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலைக்குள் கட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். நாளை மறுநாள் (6-ந்தேதி) டெல்லி செல்லும் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அந்த படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் காலை 11 மணிக்கு ஒப்படைக்கிறார். அதன் பிறகு தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தனது முடிவை அறிவிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.