;
Athirady Tamil News

நிமிஷா விவகாரத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

0

புதுடெல்லி,

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், செவிலியர் நிமிஷா பிரியா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மரண தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பாலக்காட்டில் உள்ள அவரது குடும்பத்தார் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதற்கிடையே கேரள செவிலியர் நிமிஷா பிரியா தூக்குத் தண்டனையை நிறுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு தலையிட்டு செவிலியரின் தூக்குத் தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து நிமிஷா பிரியா தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், “சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த எல்லை வரை செல்ல முடியுமோ அந்த எல்லை வரை சென்று முயன்றது. மரண தண்டனையை நிறுத்தி வைக்க முடியுமா என்று அங்குள்ள வழக்கறிஞரிடம் கேட்டோம். ஆனால் அது நடக்கவில்லை. ஏமன் அரசுக்கு எதுவும் முக்கியமில்லை.

மரண தண்டனை தள்ளி வைக்கப்படும் என்று இடையில் ஒரு தகவல் வந்தது. ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு மீறி அரசு எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இழப்பீடாக பணம் அளித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது தனிப்பட்ட பேச்சுவார்த்தையாக உள்ளது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.