கடந்த 2 வாரத்தில் துருக்கியில் 6040 முறை நிலநடுக்கம்: ஒரு லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்!!!
பூகம்பத்துக்கு பின் கடந்த 2 வாரத்தில் துருக்கியில் உள்ள 11 மாகாணங்களில் 6040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 46,000 கடந்துள்ளது. கட்டிட இடுபாடுகளை அகற்றும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், துருக்கி நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பின், அங்குள்ள 11 மாகாணங்களில் 6,040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் 40 நிலநடுக்கம் 5 முதல் 6 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. அதில் உன்று 6.6 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் சேதமடைந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தனர். அந்நாட்டின் நகர்புற மேம்பாட்டு துறை, “ஒரு லட்சத்துக்கு 5 ஆயிரத்து 794 கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதில் 20,662 கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகி உள்ளது. 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன,’’ என்று தெரிவித்துள்ளது.