;
Athirady Tamil News

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை: மேகாலயா கவர்னர் பரபரப்பு கருத்து

0

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மேகாலயா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் கூறுகையில் ‘‘விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை அவர்களின் அடிப்படை கோரிக்கை. அரசு அதை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்த கமிட்டி அமைக்க வேண்டும். இதை அரசு செய்தால், விவசாயிகள் அவர்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறுவார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவசாயிகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, அவர்களுடைய பிரச்சினையை ஆராய, அவர்கள் வீட்டிற்குச் செல்ல கமிட்டி அமைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். தேவையில்லாமல் போராட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறேன். எம்.எஸ்.பி. அவர்களுடைய கோரிக்கை. நான் அந்த விசயத்தில் அவர்களோடு இருக்கிறேன்.

மூன்று சட்டங்களை திரும்பப்பெறுவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிய முன்னெடுத்து செல்ல, பெரிய இதயம் என்பதை காட்டியதற்காகவும் நடவடிக்கை எடுத்த பிரதமரை பாராட்டுகிறேன். என்னை நியமனம் செய்தவர்களிடம் இருந்து இது தொடர்பாக ஏதாவது அறிகுறி வந்தால், இந்த நிமிடத்திலேயே தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுவாக கவர்னர்கள் அரசு கொள்கை முடிவு குறித்து கருத்து கூறுவது கிடையாது. இதனால் மேகாலயா கவர்னர் மீது மத்திய அரசு அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.