;
Athirady Tamil News

ஆந்திராவில் சூறாவளி சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் பவன் கல்யாண்..!!

0

ஆந்திர மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 150 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 25 இடங்களும் நடிகர் பவன் கல்யாணி ஜனசேனா கட்சிக்கு 1 இடமும் கிடைத்தது. பவன் கல்யாண் 2 இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியில் இருந்த தலா ஒரு எம்.எல்.ஏ., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். தற்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 எம்.எல்.ஏ.க்களும் ஜனசேனா கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை.

இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சியை பலப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து களமிறங்க நடிகர் பவன் கல்யாண் தயாராகி உள்ளார். விஜயதசமி முதல் 6 மாதங்களுக்கு ஆந்திரா முழுவதும் தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். திருப்பதியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் பவன் கல்யாண் காளஹஸ்தி, சித்தூர், கர்னூல், கடப்பா, விஜயவாடா மாவட்டங்களில் நகரங்கள் தொட்டு கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது தனது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். பொதுமக்களிடம் தனது கட்சி கொள்கைகள் மற்றும் தனது கட்சி ஆட்சி
க்கு வந்தால் செய்யப்படும் நல திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.

சுற்றுப்பயணத்திற்கு செல்லும்போது முதலமைச்சர் செல்லும்போது எப்படி போலீஸ் கான்வாயில் செல்கிறாரோ அதேபோல் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக புதியதாக 8 கருப்பு நிற கார்களை வாங்கியுள்ளார். அந்த கார்கள் பிரசாரத்திற்கு தயாரான நிலையில் உள்ளது. முதலமைச்சராவதற்கு முன்பாக சென்டிமென்டாக கான்வாயில் செல்வதற்காக கார்களை வாங்கி இருப்பதாக அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். எப்படியாவது தனது கட்சியை பலப்படுத்தி முதலமைச்சராக வேண்டும் என பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

இதற்காக சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாராகியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் நடைபயணம் செய்து தனது கட்சியை பலப்படுத்தி ஆட்சியை பிடித்தார். அதேபாணியில் தற்போது நடிகர் பவன் கல்யாணும் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.