;
Athirady Tamil News

தொடர் துப்பாக்கி சூடு: 5 நாட்களில் 7 பேர் பலி!!

0

நாடளாவிய ரீதியில் கடந்த 27ஆம் திகதி முதல் இன்று (31) வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை மற்றும் ரத்கம பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், சனிக்கிழமை (30) இரவு நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 51 வயதான நபரொருவர் பலியாகினார்.

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம, கம்மத்தேகொட பிரதேசத்தில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ரி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற நிலையில், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ரத்கம, தெவெனிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்கள் 47 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கம்பஹா, அம்பலாங்கொடை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்தப்பட வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்திருந்தனர்.

கம்பஹா நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக 27ஆம் திகதி மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ என்று அழைக்கப்படும் சமன் ரோஹித்த, அன்று மாலையும் இன்னொருவர் இரண்டு தினங்களிலும் மரணமடைந்திருந்தார்.

அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில், 27ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலியாகினர்.

இந்நிலையில், இரத்மலானை, சில்வா மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் 28ஆம் திகதி அதிகாலை நுழைந்த இருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.