;
Athirady Tamil News

பீகாரில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு- வாலிபர் பலி..!!

0

பீகார் மாநிலம் பெகுச ராய் மாலிப்பூர் சவுக் பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கும். நேற்று மாலை ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக இப்பகுதியில் திரண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென தாங்கள் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டனர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டனர். இதில் பலர் குண்டு பாய்ந்து கீழே சரிந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வியாபாரிகள் உடனடியாக தங்கள் கடைகளை அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மர்ம மனிதர்கள் வெறித்தனமாக சுட்டதில் சந்தன்குமார் (வயது 30) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக பெகுசாராய் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்தவர்கள் உயர் சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தப்பி ஓடிய 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீஸ் சூப்பிரெண்டு யோகேந்திர குமார் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.