;
Athirady Tamil News

77ஆவது ஐ.நா அமர்வில் இலங்கை அறிக்கை!!

0

நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், கலந்து கொள்வதற்கான, இலங்கைத் தூதுக் குழுவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தலைமை தாங்கவுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இன்று (18) தெரிவித்தது.

செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறவுள்ள உயர் மட்ட அமர்வில், இலங்கையின் அறிக்கையை செப்டெம்பர் 24ஆந் திகதியன்று அமைச்சர் சமர்ப்பிக்கவுள்ளார் என்றும் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு, குழு 77 மற்றும் சீன உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் ஆகியவற்றில் அவர் உரையாற்றவுள்ளார்.

மேலும், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.

ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

இலங்கைத் தூதுக்குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.