;
Athirady Tamil News

முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக்… இந்தியாவில் சில கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம் டுவீட்..!!

0

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டின் பிரதமர் ஆக சற்று முன் போட்டியின்றி தேர்வானார். அவர் விரைவில் இங்கிலாந்தின் மிக உயரிய பதவியில் பொறுப்பேற்கவுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இந்தியாவிற்கு வெளியே, அதுவும் இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து அரசாங்கத்தில் பிரதமர் ஆக தேர்வானது குறித்து நமது நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரிஷி சுனக் பிரதமராக தேர்வானது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:- “முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக்… அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை அல்லாத குடிமக்களை அரவணைத்து, அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இதிலிருந்து, இந்தியாவும், ‘பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும்’ கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது” என்று பதிவிட்டார். அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், “இந்தியா மிகவும் சகிப்புத்தன்மையுடனும், அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் நாடாக இருக்கட்டும்” என்று கூறினார். ரிஷி சுனக் பிரதமராக தேர்வான அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன், கங்கிரஸ் எம்.பி. சசி தரூர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:- “சிறுபான்மையின பிரிவை சேர்ந்த ஒருவரை மிக மிக உயரிய அரசாங்க பொறுப்பில் ந்க்கிலாந்து நாட்டினர் ஏற்றவுள்ளனர். இதன் மூலம், உலகில் மிகவும் அரிதான ஒன்றை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் ரிஷி சுனக்கின் இந்த ஏற்றத்தை கொண்டாடும் அதேவேளையில், நாம் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்போம், ‘இது போன்று இங்கே(இந்தியாவில்) நடக்குமா?'” என்று பதிவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.