;
Athirady Tamil News

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புல்மேடு பாதை முன்கூட்டியே திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி..!!

0

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலை நடைதிறக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பல்வேறு நிபந்தனைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இந்த ஆண்டு வழக்கமான கூட்டம் வரதொடங்கியுள்ளது. இதனால் போலீசார் மற்றும் வனத்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வழக்கமாக சபரிமலைக்கு குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, முண்டகயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீரில் செல்ல வேண்டும். மேலும் வண்டிபெரியாறு, சத்திரம், புல்மேடுவரை 30 கி.மீ தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.

புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ தூரத்திற்கு ஜீப் மற்றும் பஸ்களில் சென்று அங்கிருந்து 6 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதியில் நடந்து சென்றால் கோவிலை அடைந்து விடலாம். இதனால் இந்த பாதையை பக்தர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். மண்டல பூஜைக்காக கோவில் நடைதிறக்கப்பட்டு 20 நாட்களுக்கு பின்னர் இந்த பாதை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நடைதிறக்கும் போதே புல்மேடு, சத்திரம் பாதை திறக்கப்பட்டது. காலை 7 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தபின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு மகரவிளக்கு தரிசனத்தின்போது புல்மேட்டில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 107 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால் தற்போது புல்மேட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே இந்த பாதை திறக்க்பபட்டதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் விரைவாக கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்யலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.