;
Athirady Tamil News

கேரளாவில் படகு விபத்துக்கான காரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை!!

0

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் பகுதியில் நேற்று முன்தினம் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள். படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த படகுக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை படகு உரிமையாளர் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் படகு உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார்.

அவரது செல்போன் சிக்னல் மூலம் போலீசார் அவர் மறைந்து இருந்த இடத்தை கண்டு பிடித்து கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. இதுபோல கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் இந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பொறுப்பு தனூர் டி.எஸ்.பி. பென்னியிடம் வழங்கப்பட்டு உள்ளது.

அவர் உடனடியாக விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளார். படகில் 37 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 10 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. 22 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். இதில் பலியானவர் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இதுபோல மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.