போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
லெபனானின் தெற்கு மாகாணங்களின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது தாக்குதல் நடத்தியதால், இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் களமிறங்கினர்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, கடந்த வியாழக்கிழமை (ஏப். 23) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக தெற்கு லெபனானில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா படையின் தளவாடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகவும் நேற்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேலிய விமானப் படை வெளியிட்ட அறிக்கையில்,
“இஸ்ரேலின் ஷலோமி பகுதியின் மீது நேற்று முன்தினம் இரவு ஹிஸ்புல்லா படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, லெபனானின் கிர்பெட் சலாம் மற்றும் துலின் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவத் தளவாடங்கள் தகர்க்கப்பட்டன” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, லெபனான் அதிபர் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ஆகியோர் விரைவில் அமெரிக்கா வருவார்கள் என அதிபர் டிரம்ப் கூறிய சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.