;
Athirady Tamil News

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!

0

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிக் குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) இரவு அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஜராட் குஷ்னர் ஆகியோர் இன்று பாகிஸ்தான் சென்று ஈரானிய அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானில் நடைபெற்று தோல்வியடைந்த முதற்கட்ட அமைதிப் பேச்சுக்குத் தலைமைத் தாங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை செயலர் கரோலின் லீயாவிட் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த நிகழ்வில் அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடியாக ஈரானிய அமைச்சர் அராக்சி பேச்சுவார்த்தை மேற்கொள்ளமாட்டார் எனவும், போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகளை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிப்பார் எனவும் ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

இத்துடன், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது.

இதையடுத்து, கடந்த ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 3 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அதிபர் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.