டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
டொமினிகன் குடியரசில் தனியார் விமானம் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறியதில் விமானி உள்பட இரண்டு பேர் பலியாகினர்.
டொமினிகன் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள லா ரோமனா சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்ததாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சமூகஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், விமானம் டேக்-ஆஃப் செய்ய முயலும்போது, அதன் சக்கரங்கள் ஓடுபாதையில் மோதுவது தெரிகிறது.
அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம், அடுத்த சில வினாடிகளில் வெடித்துச் சிதறுகிறது.
இந்த விபத்தில் விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி பலியானதாக டொமினிகன் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விபத்து நடந்தபோது விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய தீவிர விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே விபத்துக்குள்ளான விமானம் ‘கல்ப்ஸ்ட்ரீம் ஜி200’ ரக ஜெட் ரக விமானம் என தெரிய வந்துள்ளது.