;
Athirady Tamil News

பல நாடுகளிடம் இருந்து குப்பைகளை வாங்கும் வினோத நாடு: எதற்காக தெரியுமா?

0

சுவீடன்,

பல நாடுகளில் நாளுக்கு நாள் குப்பைகளின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதனை கொட்டுவதற்கு இடமில்லாததால் சுவீடன் நாட்டில் குப்பையை இறக்குமதி செய்கின்றனர். ஒரு டன் குப்பைக்கு 43 டாலர் கொடுக்க வேண்டும் என சுவீடன் அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் பல நாடுகள் பணம் கொடுத்து குப்பைகளை சுவீடனுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த குப்பைகளை வைத்து சுவீடன் பெருமளவில் லாபத்தை பார்த்து வருகிறது.

சுவீடனின் மறுசுழற்சி பயன்பாடு
சுவீடன் நாட்டின் மறுசுழற்சி பயன்பாடு அமைப்பானது உலகத்திலேயே நம்பர் 1 அமைப்பாக இருந்து வருகிறது. இந்த நாட்டில் உள்ள 99 சதவீத குப்பைகளை மறுசுழற்சி செய்கின்றனர். சுவீடனில் 30-க்கும் மேல் மறுசுழற்சி ஆலைகள் உள்ளன. ஆனால் எரிப்பதற்கு குப்பைகள் இல்லை. இதனால் இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகளில் இருந்து குப்பைகளை பெற்று மறுசுழற்சி செய்து அதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த ஆலை ஆனது, குப்பைகளை அதிக வெப்பத்தில் எரித்து அதிலிருந்து வரும் நீராவியின் முலம் மின்சாரம் தயாரிக்கின்றனர். இது ஒரு பனிப்பிரதேசம் என்பதால் அங்குள்ள வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க மாவட்ட வெப்பமய அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கழிவு மேலாண்மை
உணவு கழிவுகள் மற்றும் அழுகிய காய்கறிகள் உள்ளிட்ட உயிரியல் கழிவுகளை தனியாக பிரித்து அவற்றில் இருந்து பயோகேஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த பயோகேஸ் பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை எரிப்பதால் வெளியாகும் புகையில் உள்ள நச்சுப் பொருட்களை கட்டுப்படுத்த நவீன வடிகட்டுதல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் புகை வெளியேற்றப்படுவதாக சுவீடனின் கழிவு மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது.

குப்பைகளை எரித்த பிறகு கிடைக்கும் சாம்பலில் இருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மீதமுள்ள சாம்பல் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

சுவீடன் குப்பைகளை மற்ற நாடுகளிடம் இருந்து பெற்று மின்சாரம் தயாரிப்பதோடு பெரும் லாபத்தை பெற்று வருகிறது என்றால் மிகையல்ல.

You might also like

Leave A Reply

Your email address will not be published.