;
Athirady Tamil News

கச்சதீவில் புத்தர்; இந்தியாவில் வெடித்தது சர்ச்சை !!

0

இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது :

“இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழகம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

சிங்கள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது!

கச்சதீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்கின்றனர். அத்திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது. புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சதீவை சிங்களமயமாக்கும் செயலாகும்.

புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்.

இவற்றையும் கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சதீவில் முகாமிடச் செய்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கூட அந்தோணியார் ஆலயத் திருவிழா, அடிப்படை வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு இந்தியா தான் உதவி வருகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

கச்சதீவிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் – கச்சதீவு தல பரிபாலகர் கோரிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.