;
Athirady Tamil News

திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு- அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நடக்கிறது !!

0

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து இந்த அணிவகுப்பு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்று கூடி அணிவகுப்பாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.

சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை அணிவகுப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்.ஜி. சாலை வரை மத்திய அரசுக்கு எதிராக அணிவகுத்து செல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, ரவிசங்கர், வி.கோ.ஆதவன், அன்பு செழியன், அம்பேத் வளவன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர். சென்னையில் உள்ள 6 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள்.

முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் மணிமண்ட பத்தில் நாளை திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அசோக் நகரில் உள்ள ‘வெளிச்சம்’ அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.