;
Athirady Tamil News

மின் வேலியில் சிக்கிய கணவன், மனைவி- உடலை மூட்டை கட்டி கிணற்றில் வீசிய பரிதாபம்!!

0

ஆந்திர மாநிலம்சித்தூர் அடுத்த புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனி (வயது 25).இவரது மனைவி பீரம்மா (20). கணவன் மனைவி இருவரும் காக்காவேரி பள்ளியில் உள்ள மாந்தோப்பில் வேலை செய்து வந்தனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த 7-ந் தேதி செட்டிபேட்டையில் உள்ள மாந்தோப்பில் வசித்து வரும் பீம்மாவின் சகோதரி சித்தம்மா வீட்டிற்கு சென்றனர். பின்னர் இரவு கணவன், மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மறுநாள் வீட்டிற்கு சென்றுவிட்டார்களா என கேட்பதற்காக சித்தமா தனது மாமா முனி செல்போனிற்கு போன் செய்தார். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சித்தம்மா சகோதரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் சகோதரியும் அவரது கணவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சித்தம்மா புங்கனூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ஏர்ரகாணி பள்ளி என்ற இடத்தில் சாக்கு மூட்டையில் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் புங்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மதுசூதன் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையில் இருந்தவர்களின் உடல்களை மீட்டனர். உடல்கள் சிதைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தது. இதையடுத்து முனி பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து அதிலிருந்து சிம்மை வைத்து இறந்தவர் முனி அவரது மனைவி பீரம்மா என போலீசார் கண்டுபிடித்தனர்.

இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் விவசாய நிலங்களை சுற்றிலும் சிலர் மின்வேலி அமைத்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த வழியாக வந்தவர்கள் மின் வேலியில் சிக்கி இறந்து இருக்கலாம். மின் வேலியில் சிக்கி இறந்ததை மறைப்பதற்காக நிலத்தின் உரிமையாளர்கள் சாக்கு மூட்டையில் பிணத்தை கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிவித்தனர். கணவன் மனைவி பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.