தரமான 3 அரசு பள்ளிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்க ஏற்பாடு- தொடக்ககல்வி இயக்குநர்!!
தொடக்ககல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிஇருப்பதாவது:- அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளி களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.