;
Athirady Tamil News

கோவில் குளத்தில் நீந்தச் சென்ற இளைஞர்கள்: செல்பியால் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

0

இந்தியாவின் பெங்களூருவில், சில பதின்மவயது மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், கோவில் குளம் ஒன்றில் நீந்தி விளையாடியுள்ளார்கள்.

அப்போது அவர்களில் ஒருவர் எடுத்த ஒரு செல்பி, அதிரவைக்கும் ஒரு செய்தியை வெளிக்கொணர்ந்தது!

கோவில் குளத்தில் நீந்தி விளையாடிய இளைஞர்கள்
20 மாணவர்கள் கோவில் குளம் ஒன்றில் நீந்தி விளையாடிக்கொண்டிருக்க, அவர்களில் ஒருவர் செல்பி ஒன்றை எடுத்துள்ளார்.

மற்றவர்கள் தொடர்ந்து தண்னீரில் கும்மாளமடித்துக்கொண்டிருக்க, செல்பி எடுத்த இளைஞரான சஞ்சய் என்பவர், தான் மொபைலில் எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவர் கண்ட ஒரு விடயம் அவரை தூக்கி வாரிப்போட, உடனடியாக ஆசிரியர்களிடம் ஓடோடிச் சென்று அந்த புகைப்படத்தைக் காட்ட, உடனே அவர்கள் பொலிசாரை அழைத்துள்ளார்கள்.

அப்படி அந்த புகைப்படத்தில் என்ன இருந்தது?
சஞ்சய் எடுத்த அந்த செல்பியில், தண்ணீரில் ஒரு தலை தெரிந்துள்ளது. பிறகுதான் தெரிந்துள்ளது, அவர்களில் ஒருவரைக் காணவில்லை என்பது.

நடந்தது என்னவென்றால், எல்லா மாணவர்களும் குளத்து நீரில் கும்மாளமடித்துக்கொண்டிருக்க, விஷ்வாஸ் (17) என்னும் மாணவர் மட்டும் ஒரு சிலைக்கு முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அவரைக் கண்ட மற்ற மாணவர்கள், நீ மட்டும் ஏன் அங்கே நிற்கிறாய், எங்களுடன் குளிக்க வா என வற்புறுத்த, அமைதியாக தண்ணீரில் இறங்கியிருக்கிறார் விஷ்வாஸ். உண்மை என்னவென்றால், அவருக்கு நீச்சல் தெரியாது, அதைக் கூறினால் மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்பதால்தான் தண்ணீரில் இறங்காமல் இருந்திருக்கிறார் அவர்.

ஆனால், நண்பர்கள் வற்புறுத்தவே, தண்ணீரில் இறங்கிய விஷ்வாஸ் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார். ஆனால், யாரும் அதை கவனிக்கவில்லை. விளைவு, பின்னர் அவரை சடலமாகத்தான் மீட்டிருக்கிறார்கள் பொலிசார்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.