போலி வேசத்துக்குள் புதிய நாடகம்!!
திடீரென வந்த ஜனாதிபதி ரணில் இப்பொழுது எங்களை அழைத்து பேச்சு என்று ஒரு போலி வேசத்துக்குள் புதிய நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரம் படுகொலை நிகழ்வு சனிக்கிழமை (10) அனுஷ்டிக்கப்பட்டபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேலும் தெரிவித்த அவர்,
“இவ்வாறான நினைவு நாட்களை அடுத்த சந்ததி மறந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் நினைவேந்தல் செய்யப்படுகின்றது. மாறிமாறி வந்த கடந்தகால அரசாங்கங்கள் ஆரம்ப காலங்களில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதற்கொண்டு இறுதியாக ரணில் விக்கிரமசிங்க வரைக்கும் ஆட்சிசெய்தவர்கள் கடந்த ஆட்சிகாலங்களில் திட்டமிட்டு இனப்படுகொலையினை அரங்கேற்றி இருந்ததை நாங்கள் மறந்துவிடவில்லை.
அண்மையில் கடைசியாக சிங்கள பேரினவாதத்தின் கைக்கூலிகளால் படுகொலை முயற்சி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் இதுபோன்றுதான் தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை உரிமை போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது.
எங்கள் போராட்டத்தினை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவும் எங்கள் உரிமை போராட்டத்தினை நாங்கள் மீண்டும் ஒருதடவை சிந்திக்ககூடாது என்பதற்காகவே மாறி மாறி வரும் அரசாங்கங்கள் செயற்படுகின்றன.
நல்லாட்சி அரசாங்காம் என்று சொல்லப்பட்ட கடந்த அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளை தராது எப்படி ஏமாற்றியதோ அதேபோல்தான் திடீரென வந்த ரணில் இப்பொழுது எங்களை அழைத்து பேச்சு என்று ஒரு போலி வேசத்துக்குள் புதிய நாடகம் அரங்கேறிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இது தமிழ்மக்களை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி முனைகின்றார். அவரால் கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கா தன்னை தயார்படுத்துவதற்காக ஒருபோலி நாடகம் இந்த பேச்சுவார்த்தை என்று சொல்லிக்கொண்டு மீண்டும் தொடங்கியுள்ளது” என்றார்.