;
Athirady Tamil News

இந்தியாவின் சந்திரயான்-3-க்கு போட்டிக்கு அனுப்பப்பட்ட ரஷியா விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு!!

0

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ந்தேதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி லூனா-25 விண் கலத்தின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். இந்நிலையில் லூனா-25 விண்கலத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

நிலவில் தலையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் விண்கலத்தை திட்டமிட்டபடி அடுத்த சுற்றுப்பாதைக்கு அனுப்ப முடியவில்லை. தற்போதைய பாதையிலேயே ரஷிய விண்கலம் சுற்றி வருகிறது. இதுதொடர்பாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் கூறும்போது, லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் வேளையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த செயல்பாட்டின் போது தானியங்கி நிலையத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி இறுதி கட்ட செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை. நிலைமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த திடீர் கோளாறு காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிகழ்வு, லூனா-25 விண்கலம் தரையிறங்குவதை தோல்வி அடைய செய்யுமா என்பதை ரஷிய விண்வெளி நிலையம் தெரிவிக்கவில்லை. தொழில் நுட்ப கோளாறை சரி செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.