;
Athirady Tamil News

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது..!!

0

மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. இந்தியா, மாலத்தீவு இடையே பல்வேறு முக்கிய துறைகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக, 500 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவால் நிதி அளிக்கப்பட்ட கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டப்பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மாலத்தீவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு முயற்சியாகும்.

கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் தலைநகர் மாலேவை வில்லிங்கிலி, குல்ஹி பல்ஹு மற்றும் திலா புஷி ஆகிய தீவுகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 6.74 கி.மீ. நீளத்திற்கு பாலம் மற்றும் தரைப்பால இணைப்பு கட்டப்படும். இது குல்ஹி பல்ஹுவில் ஒரு துறைமுகத்தை உருவாக்க உதவும்போது மாலேயின் நெரிசலைக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இந்தியா – மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் நிதியுதவியுடன் கூடிய இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மாலத்தீவு அரசு ஏற்படுத்தியது. இந்த திட்டம் மாலத்தீவு பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய ஊக்கமாக இருக்கும். ஏனெனில் இது வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும். அக்டோபர் 2020-ல் இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்காக மாலத்தீவுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிரத்யேகக் கடன் வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சிறப்பு மானியம் மூலம் இந்தியா இத்திட்டத்தை ஆதரிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். “மாலியில் 4,000 சமூக வீடுகளைக் கட்டுவதற்கான திட்டங்களையும் மதிப்பாய்வு செய்தோம். 2,000 சமூக வீடுகளுக்கு நிதி உதவி வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மாலத்தீவின் எந்தவொரு தேவை அல்லது நெருக்கடிக்கும் இந்தியா முதலில் உதவி செய்யும் நாடாக இருந்துவருகிறது, அது தொடரும்” என தெரிவித்தார். இந்தச் சலுகைக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அதிபர் சோலி, இந்தக் கூடுதல் நிதி மூலம் பல பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த முடியும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.