;
Athirady Tamil News

நாடு முழுவதும் பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக உள்ளது- பிரதமர் மோடி..!!

0

கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று 2வது கட்ட மெட்ரோ திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:
கேரளா முழுவதும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான மகிழ்ச்சியான இந்த சந்தர்ப்பத்தில், 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்புத் திட்டங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வேயை மத்திய அரசு முழுமையாக மாற்றி வருகிறது. நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் தற்போது விமான நிலையங்கள் போன்று உருவாக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவையை சிறப்பாக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. வளர்ச்சிப் பாதைக்கு ஊழலே மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்று நான் தெரிவித்தேன். ஊழலுக்கு எதிராக தீர்க்கமாகப் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு சுமார் 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கப் பட்டுள்ளன. கேரளாவில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியைத் திறக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்த, கேரளாவில் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவிடுகிறது. நாடு முழுவதும், எங்கெல்லாம் பாஜக ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் மாநில வளர்ச்சி வேகமான பாதையில் செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.