;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து தீவைத்து எரித்த கொடூரம்..!!

0

உத்தரபிரதேச மாநிலம் பிளபிட் மாவட்டம் மதோ தண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் 17 வயது கொண்ட இளம்பெண் வசித்து வருகிறார். இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். கடந்த 7-ந்தேதி இளம்பெண்ணின் தந்தை விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றுவிட்டார். அவரது தாயார் கடந்த சில நாட்களாக மற்றொரு கிராமத்தில் உள்ள தனது பெற்றோருடன் தங்கி இருந்தார். எனவே இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று மாலையில் இளம்பெண்ணின் தந்தை வயலில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது இளம்பெண் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். மகளின் நிலையை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பிலிபட் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் 80 சதவீத தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதுகுறித்து மதோதண்டா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 வாலிபர்கள் தன்னை கற்பழித்துவிட்டு தீவைத்து எரித்ததாக தெரிவித்தார். இதை கேட்டதும் இளம்பெண்ணின் பெற்றோரும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 7-ந்தேதி இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் 25 வயதுடைய 2 வாலிபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். ஆனால் இளம்பெண் அவர்களை போலீசில் பிடித்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் இளம்பெண்ணின் உடலில் கொடூரமாக தீவைத்து எரித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தகவலை இளம்பெண் போலீசிடம் தெரிவித்தார்.

இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பும் வரை அவர் கற்பழிக்கப்பட்ட தகவல் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார், வாலிபர்கள் 2 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 376 (கற்பழிப்பு), 307 (கொலை முயற்சி), 452 (வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடுதல்), 504 (வேண்டுமென்றே அவமானப்படுத்துதல்), 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் லக்னோவில் உள்ள கிங்ஜார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதற்கிடையே பரேலி மண்டல ஐஜி ரமித் சர்மா, போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் பிரபு ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணையும் பார்த்தனர். இளம்பெண்ணை கற்பழித்து எரித்த 2 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.