;
Athirady Tamil News

தெருவில் செல்பவர் மீது நாயை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் சைக்கோ வாலிபர்..!!

0

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டிப்பாளையம், ஜன்னலாடா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் தனது வீட்டில் செல்ல நாய் ஒன்று வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு தெருவில் செல்வோரை துரத்தி சென்று கடிப்பதற்கு பயிற்சி அளித்து வைத்திருந்தார்.

தினமும் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கும் ரமேஷ் அந்த வழியாக யாராவது சென்றால் தனது நாயை ஏவி விட்டு துரத்திச் சென்று கடிப்பதை கண்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதனால் ரமேஷ் வீட்டு வழியாக செல்வதற்கு பயந்து கொண்டு மாற்று வழியில் சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியூரை சேர்ந்த 2 பேர் ரமேஷ் வீட்டு வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

இதனை கண்ட ரமேஷ் அவர்கள் மீது நாயை ஏவி விட்டார். ரமேஷின் செல்ல நாய் குரைத்தபடி அவர்களை துரத்திக் கொண்டு ஓடியது. நாய் துரத்தி வருவதைக் கண்ட அவர்கள் நாயிடம் சிக்காமல் இருக்க தலை தெறிக்க ஓடினர். இதனைக் கண்ட ரமேஷ் சிரித்தபடி ரசித்து மகிழ்ந்தார். இருப்பினும் நாய் வேகமாக சென்று ஒரு நபரை கடித்துவிட்டு மீண்டும் ரமேஷ் வீட்டிற்கு வந்தது.

நாய் கடிபட்ட நபர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் இதுகுறித்து புச்சிரெட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வீர பிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.