;
Athirady Tamil News

உத்தரகாண்ட் பனிச்சரிவு – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!

0

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உத்தர்காசியில் மலையேற்ற வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம் என்பது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மீட்புப் பணிகளை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.