;
Athirady Tamil News

காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் இருக்கிறது- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி..!!

0

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தையொட்டி, வாரணாசியில் நடைபெற்ற வர்த்தக இணைப்பு மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஆன்மீகமும், வர்த்தகமும், கலாச்சாரமும், பாரம்பரியமும், வாழ்க்கை முறையும், மொழியும் இணைந்த ஒரு சங்கமம்தான் காசி தமிழ் சங்கமம். தமிழகத்தில் காஞ்சிப்பட்டின் வளர்ச்சியை, காசி பனாரஸ் பட்டில் காண முடிகிறது. இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல, வர்த்தகத்தால், பழக்கவழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடாகும். இந்த தன்மையை மனதில் கொண்டு கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று பாரதியார் பாடினார். இந்த நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது கங்கை நதி என்று மகாத்மா காந்தி 1909-ல் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். மொழிகளும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருப்பினும், தங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என அந்த நூலில் காந்தி கூறியுள்ளார். இதனை தற்போது காசியில் காண முடிகிறது. காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் இருக்கிறது. தொன்மையான கலாச்சாரத்துடன் நாட்டை காசி இணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.