;
Athirady Tamil News

புதுவைக்கு நிரந்தர கவர்னர் வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!

0

புதுவை சட்டசபையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார். ஒத்திவைப்புக்கு பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். மாநில அந்தஸ்து குறித்து சபையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது சபையிலிருந்து வெளியேறிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, நேரு எம்.எல்.ஏ.விடம் அடுத்தமாதம் பட்ஜெட்டிற்காக சபை கூடும். அப்போது விவாதிக்கலாம் என சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். இதன்பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவையில் நிலவும் பிரச்சினைகளை களைய மாநில அந்தஸ்து தேவை. அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

தாசில்தார் ரேங்கில் உள்ள நகராட்சி அதிகாரி திடீரென பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது முதல்வருக்கே தெரியவில்லை. அந்த அதிகாரிக்கு பதிலாக வடமாநிலத்தை சேர்ந்த தமிழ் தெரியாத அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மொழி தெரியாமல் எப்படி மக்கள் பிரச்சனைகளை எடுத்து செல்ல முடியும். மின்சாரம் ப்ரிபெய்டு குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை. செல்போன் போல ரிசார்ஜ் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். செல்போன் ரிசார்ஜ முடிந்தால் பக்கத்தில் இருப்பவர்களிடம் கடன் வாங்கி பேசிக்கொள்ளலாம்.

ஆனால் மின்சாரத்தை அப்படி வாங்க முடியுமா? மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விஷன் 47 கருத்துக்களை சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தங்களது அறைகளிலேயே இருந்து கொண்டு ½ மணி நேரத்திலேயே திட்டத்தை போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளனர். அதிகாரிகள் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். மாநில அந்தஸ்து கோரி போராட்டம் தொடரும். தமிழ் மொழியில் பேசும் அதிகாரிகள் வேண்டும். புதுவைக்கு நிரந்தர கவர்னர் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.