;
Athirady Tamil News

பல மாத சண்டைக்கு பிறகு உக்ரைனின் பக்முத் நகரை ரஷியா கைப்பற்றுகிறது!!

0

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. அதை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் சண்டையிட்டு வருகிறது.

பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல மாத சண்டைக்கு பிறகு பக்முத் நகரம், ரஷியா வசம் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ரஷியாவின் வாக்னர் தலைவர் கூறும்போது, பக்முத் நகர் கிட்டத்தட்ட முழுமையாக ரஷியா படைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு ஒரு சாலை மட்டுமே உக்ரைன் ராணுவத்துக்காக திறந்து இருக்கிறது என்றார். ரஷிய படைகளை தடுக்க உக்ரைன் ராணுவ வீரர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் பக்முத் நகரம் ரஷிய படையிடம் விழும் விளிம்பில் உள்ளது.

தொழில் வளமிக்க டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் முழுமையாக ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் வசம் சில பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக போரில் பின்னடைவை சந்தித்து வந்த ரஷியாவுக்கு பக்முத் நகரை கைப்பற்றுவது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.