;
Athirady Tamil News

வலிப்பு ஒரு பிரச்சினையா? (மருத்துவம்)

0

வலிப்பு நோய், ஆண்களைப் பாதிப்பதைப் போலவே பெண்களையும் பாதிக்கின்றது. குழந்தைப் பருவத்தில், பெண் குழந்தைகளைக் காட்டிலும், ஆண் குழந்தைகளையே இந்த நோய் அதிகம் பாதிக்கின்றது.

இருவருக்கும் சமமான பாதிப்பைத் தரும் உடல் கோளாறில், சமூக ரீதியிலான பாதிப்பு, பெண்களுக்கே அதிகம் ஏற்படுகின்றது. பெண்ணுக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது என்பதை வெளியில் சொல்லவே தயங்கும் சமூகத்தில் நாம் இருக்கின்றோம்.

திருமணம் நடப்பதில் சிக்கல்; குழந்தை பிறக்குமா என்ற சந்தேகம்; அம்மாவுக்கு இருந்தால், குழந்தைக்கும் வந்து விடுமோ என்ற பயம், இப்படிப் பொதுவான பிரச்சினையில், பெண்ணுக்கு மட்டும் பாதிப்புகள் அதிகம். வலிப்பு நோயில், பல வகைகள் உள்ளன. சிலருக்கு வலிப்பு நோய் பாதிப்பு, மாத விடாய் நேரங்களில் அதிகமாகலாம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டரோன் ஹோர்மோன்கள், மாதவிடாய் சுழற்சியில் பாரிய பங்கு வகிக்கின்றன. இதனால், வலிப்பு நோய் பாதிப்புள்ள பெண்களுக்கு, நோயின் தன்மை அதிகரிக்கும். மாதவிடாயின்போது, வலிப்பு அதிகமானால், அதற்கான மருந்துகளும் ஏற்றவாறு வழங்கப்படல் வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில், இரத்தப் போக்கு அதிகம் இருப்பது, கருக் குழாயில், நீர்க் கட்டிகள் பாதிப்பு, தைராய்ட்டு கோளாறு, மன அழுத்தம் போன்றவற்றால் ஹோர்மோன்களின் செயற்பாட்டில், சமச்சீரற்ற நிலை ஏற்பட்டு, வலிப்பு நோயின் பாதிப்பு அதிகமாகலாம்.

உடலில் ஏற்படும் மின் அதிர்வுகளால், மூளையில் ஏற்படும் உறுத்தல் காரணமாகவும் சில நேரங்களில், உறுத்தல் இல்லாமலும் வலிப்பு வரும் சாத்தியம் உள்ளது.

மரபியல் காரணங்களால், வலிப்பு வரும். கர்ப்ப காலத்தில், உடலின் நீர்ச்சத்து அதிகரிப்பதால், வலிப்பு வரும் வாய்ப்பு அதிகம்.

இது, குழந்தையைப் பாதித்து விடுமோ என்ற பயம் வருவது இயல்பு. தற்போது நடைமுறையிலுள்ள புதிய மருந்துகள், கர்ப்பத்திலுள்ள சிசுவை, எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. உடலின் நீர்ச்சத்துக்கு ஏற்ப, மருந்தின் அளவை, வைத்தியர்களின் ஆலோசனையுடன் அதிகரிப்பது அவசியம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் இருக்காது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.