;
Athirady Tamil News

நாட்டிலேயே முதல் மாநிலமாக்க ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கிறேன்- கர்நாடகா மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!!

0

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. 38 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் இலக்குடன் அந்த கட்சி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு திறந்த மனதுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் கனவும் எனது கனவாகும். கர்நாடகாவின் பிரகாசமான எதிர்காலமே எனது வேண்டுகோளாகும். இது உங்கள் குடும்பத்தின் எதிர்காலமாகும். குறிப்பாக இன்றைய தலைமுறையின் எதிர்காலத்திற்காக வேண்டுகிறேன். உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இதனை முதல் 3 இடங்களுக்குள் கொண்டு வரும் அடுத்த இலக்கை கொண்டுள்ளோம். கர்நாடகாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது மட்டுமே இது சாத்தியமாகும்.

முதலீடு தொழில்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா நம்பர் ஒன் ஆக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் மீது அன்பை பொழிந்து இருக்கிறீர்கள். இதை தெய்வீக ஆசீர்வாதமாக உணர்கிறேன். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் நான் பெற்ற பாசம் இணையற்றது. உங்களின் உறுதியே எனது உறுதி. நாம் ஒன்றுபட்டு ஒரு இலக்கை நோக்கி மனதை அமைக்கும்போது உலகில் உள்ள எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது.

கொரோனா தொற்று காலத்தில் கூட பா.ஜனதா ஆட்சியின் கீழ் கர்நாடகாவில் ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு கிடைத்தது. இது இளைஞர்களுக்கான பா.ஜனதாவின் அர்ப்பணிப்பாகும். முந்தைய அரசின்போது கர்நாடகாவில் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு மட்டுமே கிடைத்தது. இவ்வாறு மோடி கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி 19 பொதுக்கூட்டங்களில் பேசினார். மேலும் 6 ரோடு ஷோவும் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.