;
Athirady Tamil News

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் பெப்ரல் அமைப்பு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!

0

வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் இது வரையில் கிராம உத்தியோகத்தரிடமிருந்து எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறாதவர்கள் 31ஆம் திகதிக்கு முன்னர் கிராம அலுவலரை அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நாடி உரிய ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மக்களின் இறையாண்மையின் ஒரு அங்கமான வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு வாக்காளர்களாக அனைவரும் தம்மை பதிவு செய்வது கட்டாயத் தேவையாகும்.

வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரும் ஜனாதிபதித் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் வாக்கெடுப்புகளில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாவர்.

இதனால், மக்கள் இறையாண்மையின் கீழ் ஒவ்வொரு பிரஜைக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்தாலும், வாக்காளர் பதிவேட்டில் அவர்களது பெயர் இடம் பெற்றால் மட்டுமே அதைச் செயற்படுத்த முடியும்.

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை பதிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் இதுவரையில் தொடர்புகொள்ளவில்லை எனில் , 31ஆம் திகதிக்கு முன்னர் அவரை அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நாட வேண்டும்.

அதே வேளை கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது வசிப்பிடத்தை மாற்றியிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இந்த ஆண்டு பதிவுக்கு தகுதி பெறாமல் இருந்தாலோ, அதனை கிராம அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்தல் மற்றும் வாக்களிப்பது பிரஜைகளின் உரிமையும் மற்றும் பொறுப்புமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.