;
Athirady Tamil News

காற்றாடி பிடிக்க சென்ற சிறுவன் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு- உடல் உறுப்புகள் தானம்!!

0

சென்னை சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் பிரசன்னா. 13 வயது சிறுவனான இவன் நேற்று மாலை தனது நண்பர்களோடு வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ காற்றாடி ஒன்று பறந்து வந்தது. அதனை பார்த்ததும் பிரசன்னாவும் அவனது நண்பர்களும் காற்றாடியை பிடிக்க ஓடினார்கள். அப்போது காற்றாடி மாடி ஒன்றில் போய் விழுவது போல சென்றது. இதையடுத்து பிரசன்னாவும் மற்ற சிறுவர்களும் மாடியில் ஏறிச்சென்று காற்றாடியை எடுக்க ஓடினார்கள். மாடிகளில் ஏறிச்சென்று காற்றாடியை எடுப்பதற்காக பிரசன்னா அப்பகுதியில் 2- வது மாடிக்கு சென்றான். அப்போது பக்கத்து மாடியில் பறந்து கொண்டிருந்த காற்றாடியை சிறுவன் பிரசன்னா எடுக்க முற்பட்டான். இதில் அவன் எதிர்பாராத விதமாக 2- வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த பிரசன்னாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தான். இது பற்றி சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிரிழந்த சிறுவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி அவனது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. மகனை இழந்து வாடும் தந்தை தண்டபாணி கண்ணீர் மல்க கூறும்போது குழந்தைகளை பெற்றோர் பத்திரமாகவும் அரவணைப்போடும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.