ரப்பாணக் தோட்ட இளைஞன் வெட்டி கொலை !!
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலை சம்பவத்தில் வி.தனோஷன் (வயது 19) என்ற இளைஞர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அதேநேரத்தில் இக்குழு சண்டையில் (21) வயதுடைய இளைஞர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கத்தி வெட்டை நடத்திய இளைஞர் தானாகவே பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகியுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் மரண விசாரணையை வலப்பனை நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
இந்த கத்தி வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் நண்பர்கள் இவர்கள் அனைவரும் (29) மாலை மது அருந்திய பின் காதல் பிரச்சினை ஒன்றுக்காக ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது கத்தி வெட்டை நிகழ்த்திய இளைஞரை ஏனைய இளைஞர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் உடப்புஸ்ஸலாவை நகரில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் வெட்டு கத்தி ஒன்றை பணம் கொடுத்து வாங்கி சென்று தன்னை தாக்கிய இளைஞர்களை வெட்டியுள்ளார்.
இதில் ஒரு இளைஞரின் உயிர் பரிபோகியுள்ளது, மேலும் ஒரு இளைஞர் வெட்டு காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.